Wednesday, December 23, 2009

Merry Christmas


Tuesday, November 10, 2009

ஏழைகளின் சிரிப்பில் இறைவனை காணும் SALVATION ARMY



ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்கிறேன் என்பது அறிஞர் அண்ணாவின் வாக்கு .அதைப் போன்று SALVATION ARMY எனப்படும் அமைப்பு இன்று உலகம் முழுவதும் பல நாடுகளில் ஏழைகளுக்கும், தேவையிலிருப்பவர்களுக்கும் உதவி செய்து வருகிறது.

ஏழைகளுக்கு உதவி செய்யும் நல்லெண்ணத்தில் 1865 ல் இங்கிலாந்தின் கிழக்கு லண்டன் பகுதியில் வில்லியம்பூத் மற்றும் கேதரின் பூத் என்னும் தம்பதிகளால் ஆரம்பிக்கப்பட்ட கிறிஸ்தவ நிறுவனம் தான் இரட்சணிய சேனை என்றழைக்கப்படும் SALVATION ARMY.

இன்று 118 நாடுகளில் தனது பணியை சிறப்பாக செய்து வருகிறது Salvation Army. குறிப்பாக இயற்கை பேரழிவுகளிலும், பெரும் விபத்துகளிலும் தங்களது உதவிக்கரங்களை நீட்ட SA எப்போதுமே தவறியதில்லை.

2001 ல் அமெரிக்காவில், உலக வர்த்தக மையத்தின் இரட்டைக் கோபுரங்கள் தகர்க்கப்பட்ட போதும் Red Cross க்கு இணையாக நின்று நிவாரணப்பணிகளை மேற்கொண்டதும் Salvation Army தான்.

2004 ல் இந்தியா உட்பட்ட தெற்காசிய நாடுகள் ஆழிப்பேரலையின் (சுனாமி) தாக்குதலுக்கு உள்ளான போதும் நிவாரணப்பணிகளை மேற்கொண்டிருக்கிறது.



குறிப்பாக தூத்துக்குடி பகுதியில் வீடுகளை இழந்தவர்களுக்கு தற்காலிக குடியிருப்புகளை ஏற்படுத்தியதோடு சாலையையும் சீரமைத்துக் கொடுத்து நிவாரணப்பணிகளை மேற்கொண்டது. அந்த சாலைக்கு அரசாங்க அனுமதியுடன் வில்லியம் பூத் சாலை எனவும் பெயரிடப்பட்டது.

தமிழகத்திலும் கல்விப்பணி, மருத்துவப்பணி, சமூகப்பணி என பல பணிகளை மேற்கொண்டுவருகிறது. மருத்துவப்பணியில் சொல்லும்படியாக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நகரத்தில் காதரீன் பூத் மருத்துவமனை சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

காலங்காலமாக சிறந்து விளங்கிவரும் உலகின் பத்து பிரபல அமைப்புகளை 2004 ல் Booz Allen Hamilton என்ற நிறுவனம் பட்டியலிட்டது. அதில் ஆக்ஸ்ஃபோர்டு,ஒலிம்பிக் விளையாட்டுகள், சோனி நிறுவனம்,ரோலிங் ஸ்டோன்ஸ் இவைகளின் வரிசையில் Salvation Army ம் பட்டியலிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் தகவல்கள் அறிய
http://en.wikipedia.org/wiki/Salvation_army
http://www.salvationarmy.org/ihq/www_sa.nsf
http://www1.salvationarmy.org/ind

http://en.wikipedia.org/wiki/Catherine_Booth_Hospital

நன்றி
SA,
Gee Jo Sam,

CBH - Gershom


Sunday, November 8, 2009

ROCK THUNDER இடம் எச்சரிக்கையாயிருங்கள்

ஆர்குட் எத்தனை அற்புதமானதோ அத்தனை ஆபத்தும் நிறைந்தது என்பதற்கு கடந்த சில நாட்களாக நிகழும் நிகழ்வுகளே சாட்சி.

ஆர்குட் வழியாக கிறிஸ்தவ அன்பர்களுக்கிடையேயான அன்பை முறிக்கவும், சபைகளுக்கிடையே பிரிவினையை ஏற்படுத்தவும் முயன்று வரும் கயவர்களிடம் இருந்து உங்களைக் காத்துக் கொள்ளுங்கள்.

குறிப்பாக நாகர்கோவில் வட்டம் இலந்தையடி கிராமத்தைச் சார்ந்த ஒரு விஷமி THE ROCK THUNDER என்ற பெயரில்(ஒன்றல்ல THE ROCK THUNDER-PAROSH, THE ROCK THUNDER MINISTRY, THE ROCK THUNDER-SHEPHATIAH, THE ROCK THUNDER-ARAH, THE ROCK THUNDER PAHATH என ஐந்து பெயர்களில்) இரட்சணிய சேனைக்கும், சேனை பணிகளுக்கும் எதிராக அவதூறை பரப்பி வருகிறான்.

அவனது ஊழியம் நேரடியாக பரலோகத்திருந்து வருகிறது என்பது அவன் பிரச்சாரம். அது மட்டுமல்லாமல் அவன் தீர்க்கத்தரிசனம் வேறு உரைக்கிறானாம்.

நண்பர் ஒருவருடனான நேற்றைய உரையாடலின் போது... இரட்சணிய சேனை ஊழியக்காரர் ஒருவனின் மகன் இருசக்கர வாகன விபத்தில் விரைவில் பலியாவார் என கடவுள் அவனிடம் கூறியதாகத் தெரிவித்திருக்கிறான்.

அந்த விஷமியிடம் இரட்சணிய சேனை ஊழியக்காரர்களின் பிள்ளைகளும் ஒட்டி உறவாடிக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழில் இடிமுழக்கம் என அறியப்படும் ROCK THUNDER ன் ஊழியங்களைக் குறித்து நான் நன்கு அறிவேன். மது அருந்தி விட்டு போதகம் செய்து வரும் அவர்கள் நடவடிக்கைகளையும் அறிவேன்.

எச்சரிக்கையாயிருங்கள்.
அவனது ஆர்குட் பக்கத்தை காண இங்கே சொடுக்கவும்

Sunday, October 4, 2009

Please dont forward...

It's quite interesting and funny to see e-mails circulating all around the world about voting against the banning of christian preachers and christmas .
SNOPES says its absolutely false. Know more from the following link. Friends... please dont forward such e-mails. http://www.snopes.com/politics/religion/fcc.asp
(Click the picture to read more)

Tuesday, August 25, 2009

பகட்டை விரும்பும் இரட்சணிய சேனை(யர்கள்)

இல்லாதிருப்போருக்கு இரங்கி
இறைப்பணி செய்வதற்காக
இங்கிலாந்தில் ஆரம்பிக்கப்பட்ட
இரட்சணிய சேனையின்-பணி
இன்று இந்தியாவில்
இதயமற்று இருப்பது
இதயத்தை கனக்கச் செய்கிறது.

இரு வாரங்களுக்கு முன்பு நாகர்கோவிலில் புகழ்பெற்ற சபை/படைஸ்தலம்/மண்டபம்/தேவாலயம்!? ஒன்றில் ஆராதனையினிடையே நிகழ்ந்த சம்பவம் நிச்சயமாக ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்று அல்ல.

உலகில் பிரச்சினை இல்லாத இடம் தான் எங்கிருக்கிறது. பிரச்சினைகளை சுமூகமாக பேசித் தீர்த்திருக்கலாம்.இருதரப்பினரும் சரியான ஒரு முடிவிற்கு வராமல் இருப்பது தொடர்ந்து பிரச்சினைகளுக்கு தான் இடமளிக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.

இன்று பதவி, புகழ், பகட்டு இவற்றை குறிவைத்து இயங்கும் சிலராலும் நான் என்ற அகங்காரமும், சரியான தலைமையும், வழிநடத்துதல் இல்லாமையும் தான் இதுபோன்ற தர்மசங்கடமான நிலைகளை ஏற்படுத்துகிறது என்றால் அது மிகையல்ல.

இது ஒருபுறமிருக்க ஆராதனை நடைபெறும் இடங்கள் இன்று தேவைக்கு மிஞ்சிய அலங்காரங்களாலும், ஆக்கிரமிப்புகளினாலும் அலங்கோலப்படுத்தப்படுகின்றன.இயற்கையை மாய்த்து செயற்கையை ஏற்படுத்துவதோடு அதில் மகிழ்ச்சியும் காண்கிறார்கள்.

குறிப்பாக பாளையில் மணிக்கூண்டு வைக்க வேண்டுமென்பதற்காக உயிராய் இருந்த பல மரங்கள் வேரோடு வெட்டி சாய்க்கப்பட்டிருக்கின்றன. தமிழகத்தின் பல கிராமங்களிலும், வட இந்தியாவிலும் ஆராதனைக்கு ஒதுங்குவதற்கு கூட இடமில்லாதிருக்கையில் இங்கோ பல லட்சங்கள் செலவில் இவர்களுக்கு மணிக்கூண்டு என்ன தேவைக்கோ தெரியவில்லை.

இறைவன் பெயரில்
இறைப்பணி நடக்கின்றதோ இல்லையோ
இங்கு-பகட்டான பிற பணிகள்
இலகுவாக நடக்கின்றன

Saturday, May 16, 2009

"கட்டாய மத மாற்றத் தடைச் சட்டம்"-விவிலியத்தின் பார்வையில்

[Prevention Of Forcible Conversion Of Religion Act-In the aspect of BIBLE]

'இந்த கட்டுரை, சட்டம் அமுலாக்கப்பட்ட வருடமான 2002ல் என்னால் எழுதப்பட்டு போர்ச்சத்தத்தில் வெளியிடுவதற்கு மறுக்கப்பட்ட ஒன்று'

அனைவருக்கும் கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.சில வருடங்களுக்கு முன்பதாக தமிழகத்தில் 'கட்டாய மத மாற்ற தடைச் சட்டம்' என்ற சட்டம் அமுலாக்கப்பட்டது பலருக்கு நினைவிருக்கலாம்.

அதன் தொடர்ச்சியாக பல கிறிஸ்தவ சபைகளும்,பிற மதங்களைச் சார்ந்தவர்களும் அந்த சட்டத்தைத் தமிழக அரசு திரும்பப் பெறல் வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி பலவிதமான போராட்டங்களை நடத்தினர்.

இவைகளுக்கு மனுஷராலுமல்ல மனுஷன் மூலமாயுமல்ல,இயேசு கிறிஸ்துவினாலும் அவரை மரித்தோரிலிருந்தெழுப்பின பிதாவாகிய தேவனாலும் (கலாத்தியர் 1:1) அப்போஸ்தலர்களாலும், கர்த்தரால் ஏவப்பட்டவர்களாலும் எழுதப்பட்ட வேதாகமத்தின் இரகசியங்களை நாம் ஆராய்வது அவசியமாகிறது.

1. கிறிஸ்தவம் மதம் அல்ல 'மார்க்கம்'

முதலாவது கிறிஸ்தவம் என்பது மதமல்ல என்பதை மனதில் கொள்ள வேண்டும்.எபிரெயர் 10:19ல் ஆகையால் சகோதரரே இயேசுவானவர் புதிதும் ஜீவனுமான 'மார்க்கத்தை' நமக்கு உண்டுபண்ணின படியால்...என்ற வசனத்தினாலும்;யோவான் 14:6ல் நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன் என்ற இயேசு கிறிஸ்துவின் வார்த்தையாலும் கிறிஸ்தவம் என்பது மதமல்ல அது நித்திய ஜீவனுக்கான மார்க்கம் அல்லது வழி என்பது நிரூபணமாகிறது.

மேலும் யோவான் 14:3,4 மற்றும் 4-6 வசனங்களில்... நான் போய் உங்களுக்கு ஒரு ஸ்தலத்தை ஆயத்தம் பண்ணின பின்பு...நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக் கொள்ளுவேன்;நான் போகிற இடத்தை அறிந்திருக்கிறீர்கள் என்றும் இயேசு கிறிஸ்து உரைத்திருக்கிறார்.

இவ்விதமாக இயேசு கிறிஸ்து தனது சீஷர்களுடன் உறவாடும் போது 'வழி'யை அறிந்திருக்கிறீர்கள் என்று தான் வார்த்தைகளை உதிர்த்தாரே தவிர மதம் என்ற உச்சரிப்பையே அவர் உபயோகிக்கவில்லை.
(வழி/அல்லது மார்க்கத்திற்கு இணையான ஆங்கில வார்த்தையும் way என்பதாகவே இருக்கிறது)

இயேசுகிறிஸ்து நித்திய ஜீவனுக்கான வழியை அல்லது மார்க்கத்தை இந்த உலகிற்கு காட்ட வந்தாரே அன்றி ஒரு மதத்தை ஸ்தாபிக்க வரவில்லை என்பது இதன் மூலம் நமக்கு தெளிவாகிறது.

மதத்தின் பெயரால் நாம் பிறரை கட்டாயப்படுத்தினால் அல்லவா நாம் பிறருக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்துக்குள்ளாவோம்.நாமோ கிறிஸ்துவின் அன்பையும்,நித்தியஜீவனுக்கான வழியையும் அல்லவா அவர்களுக்கு காட்டுகிறோம்.

மதம் என்பது வெறி,கோபத்தின் உச்சம் என்பதாக பொருள்படும்.எனவே மதம் பிடித்த யானையைப் போல் பிற மாக்களைப் போல நடவாமல் ஆவியின் கனிகளான (கலாத்தியர் 6:22,23)அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம் இவைகளை கொண்டு கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மாற்கு 16:15ல் கூறியுள்ளபடி... 'உலகமெங்குள்ள மக்களுக்கு அவருடைய சுவிசேஷத்தை பிரசிங்கிப்பது நமது கடமையாயிருக்கிறது.

2.கட்டாயத்தின் மூலம் மனித மதங்களை மாற்றுவதல்ல கிறிஸ்தவம்

உங்களிடத்திலுள்ள தேவனுடைய மந்தையை நீங்கள் மேய்த்து,'கட்டாயமாய் அல்ல', மனப்பூர்வமாய்...சுதந்தரத்தை இறுமாப்பாய் ஆளுகிறவர்களுக்காக அல்ல(இன்றைய ஆட்சியாளர்களைப் போல) மந்தைக்கு மந்திரிகளாகவும் கண்காணிப்பு செய்யுங்கள் என்ற I பேதுரு 5:2,3ன் படியும்;அவனவன் விசனமாயுமல்ல,கட்டாயமாயுமல்ல தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன் என்ற IIகொரிந்தியர் 9:7ன் கூற்றின்படியும் கட்டாயப்படுத்தல் என்ற வார்த்தை கிறிஸ்தவத்தின் வேரிலேயே கிடையாது என்பது தெளிவாகிறது.

அப்போஸ்தலர் 26:11-18வரையான வேத வார்த்தைகளை உற்று நோக்கும் போது முன்னாட்களில் கட்டாயப்படுத்தியது எந்த சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்பதை நாம் நன்கு புரிந்து கொள்ளவியலும்.

அப்போஸ்தலர்26:16 ன் படி இயேசுகிறிஸ்துவின் மூலம் கட்டாயத்தினால் அல்ல... அவரது தரிசனத்தால்,பெரும் யூதனாயிருந்த சவுல் தேவ ஊழியக்காரனான பவுலாக மாறிய நிகழ்விலிருந்து கட்டாயத்தின் மூலம் மதம் மாற்றம் என்ற வார்த்தைக்கு கிறிஸ்தவ சரித்திரத்திலேயே இடம் கிடையாது என்பது மீண்டும் தெளிவாகிறது.

இதே பவுலானவர் தான் சுவிசேஷம் பிரசிங்கித்ததன் விளைவாக கட்டப்பட்டவனாய் இருக்கையில்... பிலேமோனுக்கு உதவி வேண்டி பின்வருமாறு எழுதுகிறார் (பிலேமோன் 1:14) நீர் செய்யும் நன்மையை கட்டாயத்தினால் அல்ல, மனப்பூர்வமாய் செய்யத்தக்கதாக, நான் உம்முடைய சம்மதியில்லாமல் ஒன்றும் செய்ய எனக்கு மனதில்லை.

நெருக்கத்தின் நிலையிலும் பவுல் கட்டாயப்படுத்தவில்லை என்பது இதில் கண்கூடு.எனவே கிறிஸ்தவம் தனது சுதந்தரத்தின் போதும்,நெருக்கத்தின் நடுவிலும் கூட பிறரைக் கட்டாயப்படுத்துவதில்லை என்பது வெட்ட வெளிச்சமாகிறது.

3.சட்டம் நமக்கு என்ன செய்து விடும்... இல்லையென்றால் நாம் பாடுபடுவதை வெறுக்கிறோமா?

கட்டாய மதமாற்றத் தடைச்சட்டத்தின் மூலம் மட்டுமல்ல பிற பிரச்சினைகள்,பாடுகள், மிரட்டல்கள் வருகையிலும் கிறிஸ்தவர்கள் ஏன் சோர்ந்து போகிறோம்? அவ்விதமான பாடுகளை ஏன் ஏற்றுக் கொள்ள மறுக்கிறோம்?

"துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்,பரலோகராஜ்யம் அவர்களுடையது" என்று எட்டு மோட்சானந்தங்களில் கிறிஸ்து சொல்லிச் செல்லவில்லையா?

கட்டாயமே கிறிஸ்தவ மார்க்கத்தில் இல்லாத நிலையில் நாம் எதற்கு அஞ்சுகிறோம்?சட்டத்தை எதிர்த்து போராட்டங்கள்,பேரணிகள்,மாநாடுகள் நடத்துவதால் என்ன விளையப் போகிறது?

இவைகளினால் காலமும்,பணமும் தான் விரயமாகிறது.தொடர்ந்து போராடுவது கட்டாயப்படுத்தலை அனுமதிக்கக் கோருவது போலவும் ஆகி விடுகிறது.கிறிஸ்தவமே கட்டாயப்படுத்தலை அனுமதிக்காத நிலையில் நாம் ஏன் முரண்படுகிறோம்?

அப்படியே சட்டம் தவறாக பயன்படுத்தப்பட்டு நாம் அவதிக்குள்ளானாலும் அதனால் பேதுரு எழுதுகிறபடி தேவ நாமம் மகிமைப்படுமே!! Iபேதுரு 4:16 - ஒருவன் கிறிஸ்தவனாயிருப்பதினால் பாடுபட்டால் வெட்கப்படாமலிருந்து அதினிமித்தம் தேவனை மகிமைப்படுத்தக்கடவன்.

பவுல் பாடுகள் குறித்து I கொரிந்தியர் 6:7 ல் பின்வருமாறு கூறுகிறார்,நீங்கள் ஒருவரோடொருவர் வழக்காடுகிறது எவ்விதத்திலும் குற்றமாயிருக்கிறது,அப்படி செய்கிறதை விட நீங்கள் ஏன் அநியாயத்தைச் சகித்துக் கொள்ளுவதில்லை,ஏன் நஷ்டத்தை பொறுத்துக் கொள்ளுகிறதில்லை?

இன்னும் கூறப்போனால் இயேசு கிறிஸ்துவும் பொய் குற்றச்சாட்டுகளினால் நிமித்தமே பாடுகள் அனுபவித்தார்.

இப்படியிருக்க கிறிஸ்து நமக்காக மாம்சத்திலே பாடுபட்டபடியால் நீங்களும் அப்படிப்பட்ட சிந்தையை ஆயுதமாக தரித்துக் கொள்ளுங்கள் என்று பவுல் I பேதுரு 4:1 ல் எழுதிச் சென்றபடி சகிப்புத்தன்மை என்ற ஆயுதத்தைக் கொண்டு கிறிஸ்தவ மார்க்கத்தைப் பிறருக்குக் காட்ட எத்தனிப்போம்.

Sunday, April 12, 2009

பண்டிகை கால பகட்டு பக்தி ஏன்


கடந்த வெள்ளி அன்றும் நேற்றும்(12.04.09) நான் உரையாடியவர்கள் எல்லாம் என்னிடம் கேட்ட பொதுவான ஒரு கேள்வி "ஆலயத்திற்கு சென்றாயா" என்பதே?

பண்டிகைக் காலங்களில் மட்டும் தேவாலயங்கள் வழக்கத்திற்கு மாறாக நிரம்பி வழிவதையும்; அன்று வரை பாரா முகங்களாக இருந்த பல முகங்களையும் பார்க்க நேரிடுவதும் உண்டு.இது பிற சமய வழிபாட்டு தலங்களில் எப்படி என தெரியவில்லை.என்றாலும் நண்பர்களிடம் விசாரித்த வரையில் பெரும்பாலும் அங்கும் இதே நிலை தான் என தெரிய வருகிறது.

வருடத்தின் பிற நாட்களில் வழிபாட்டிற்கு செல்லவில்லை என்றால் கூட வீட்டிலும்,நண்பர் வட்டாரத்திலும் என்ன ஏது என கேட்க ஒருவருமிருக்க மாட்டார்கள்.ஆனால் பண்டிகை காலங்களில் வழிபாட்டிற்கு செல்லவில்லை என்றால் போதும் உடனே கேள்விகளால் துளைக்க ஆரம்பித்து விடுவார்கள்.

என்னமோ அன்று தான் இறைவன் இம்மண்ணுலகிற்கு இர(ற)ங்கி வருவது போன்ற தோரணையை ஏற்படுத்தி விடுவர்.

சமயங்கள் சொல்லும் சத்திய சிந்தனைகளையோ,நீதி நியாயங்களையோ நடைமுறைப் படுத்த முயல்பவர் இங்கு வெகு சிலரே.வழிபாட்டில் பங்கு கொண்டால் மட்டும் போதும் அவர்களுக்கு.அதுவும் பண்டிகைக் காலம் அல்லது விசேஷ வழிபாடு என்றால் நிச்சயம் செல்ல வேண்டும் என்பது அவர்கள் அகராதியில் எழுதப்பட்ட ஒன்று.

இறைவன் கருணை வடிவில்,அன்பின் உருவமாய் எங்கும் நிறைந்திருக்கிறான் என்பதே உண்மை என நான் கருதுகிறேன். அதனை விட்டு விட்டு ஒரு நான்கு சுவருக்குள் நுழைந்தால் அல்லது ஒரு குறிப்பிட்ட வழிபாட்டு தலத்திற்கு சென்றால் இறைவனின் தரிசனம் கிடைக்கும் என்பதை நான் நம்பவில்லை.(விவிலியத்தில் கூட ஒரு இடத்தில் நீங்களே அந்த ஆலயம் என்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது)நம்மையும் நம்மைச் சார்ந்து இருக்கிறவர்களையும் தீமையிலிருந்து விலக்குதலே உண்மையான வழிபாடு.

வழிபாட்டிற்கு செல்வதை நான் குறை சொல்லவில்லை,செல்லக்கூடாது எனவும் சொல்லவில்லை.ஒரு குறிப்பிட்ட நாளில் அல்லது ஒரு குறிப்பிட்ட தலத்திற்கு மட்டும் சென்றால் இறைவனை தரிசிக்கலாம் என்ற நம்பிக்கை ஏன் என்ற கேள்வி மட்டுமே என் மனதில் மையம் கொண்டிருக்கிறது.

பல வழிபாட்டு தலங்களில் விசேஷ வழிபாடுகளின் போது கூட்ட நெரிசலில் சிக்கி மாண்டவரையும் இப்பாரத பூமி பார்த்தவள் தானே!

அதோடு பண்டிகை காலங்களில் ஒலி பெருக்கிகளின் தொல்லை சொல்லி மாளாது.எந்த சமயத்தைச் சார்ந்த பண்டிகை ஆனாலும் வழிபாடு ஆனாலும் ஒலி பெருக்கிகள் மூலம் அவர்கள் தரும் இம்சை பெரும் இம்சை.இறைவனை வழிபடுகிறவர்கள் என்ன காரணத்திற்காக ஒலி பெருக்கிகளில் கூச்சல் போடுகிறார்கள் என்பது தான் விடை தெரியாத கேள்வி.

அருகாமையில் எவர் இருக்கிறார்,நோயாளிகள் இருக்கின்றனரா?வயது முதிர்ந்தவர்கள் இருக்கின்றனரா?தேர்வுகளுக்கு ஆயத்தமாகும் மாணவர்கள் இருக்கினரா என ஒன்றும் யோசிப்பதில்லை.

ஒலிபெருக்கி வைத்து ஊரெல்லாம் கேட்கும்படி பிரச்சாரம் செய்யுங்கள் என அனைத்து சமய வழிபாட்டு நூல்களிலும் எழுதப்பட்டிருக்கிறதோ என்னமோ!

பிறர் தேவை அறிந்து அருளும் உதவியே நாம் செய்யும் உண்மையான வழிபாடாக இருக்கவியலும்.அல்லாமல் வழிபாட்டு தலங்கள் மற்றும் ஒலிபெருக்கிகளைக் கொண்டு இறைவனை வழிபடலாம் என நினைப்பது சரியென படவில்லை.