Tuesday, August 25, 2009

பகட்டை விரும்பும் இரட்சணிய சேனை(யர்கள்)

இல்லாதிருப்போருக்கு இரங்கி
இறைப்பணி செய்வதற்காக
இங்கிலாந்தில் ஆரம்பிக்கப்பட்ட
இரட்சணிய சேனையின்-பணி
இன்று இந்தியாவில்
இதயமற்று இருப்பது
இதயத்தை கனக்கச் செய்கிறது.

இரு வாரங்களுக்கு முன்பு நாகர்கோவிலில் புகழ்பெற்ற சபை/படைஸ்தலம்/மண்டபம்/தேவாலயம்!? ஒன்றில் ஆராதனையினிடையே நிகழ்ந்த சம்பவம் நிச்சயமாக ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்று அல்ல.

உலகில் பிரச்சினை இல்லாத இடம் தான் எங்கிருக்கிறது. பிரச்சினைகளை சுமூகமாக பேசித் தீர்த்திருக்கலாம்.இருதரப்பினரும் சரியான ஒரு முடிவிற்கு வராமல் இருப்பது தொடர்ந்து பிரச்சினைகளுக்கு தான் இடமளிக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.

இன்று பதவி, புகழ், பகட்டு இவற்றை குறிவைத்து இயங்கும் சிலராலும் நான் என்ற அகங்காரமும், சரியான தலைமையும், வழிநடத்துதல் இல்லாமையும் தான் இதுபோன்ற தர்மசங்கடமான நிலைகளை ஏற்படுத்துகிறது என்றால் அது மிகையல்ல.

இது ஒருபுறமிருக்க ஆராதனை நடைபெறும் இடங்கள் இன்று தேவைக்கு மிஞ்சிய அலங்காரங்களாலும், ஆக்கிரமிப்புகளினாலும் அலங்கோலப்படுத்தப்படுகின்றன.இயற்கையை மாய்த்து செயற்கையை ஏற்படுத்துவதோடு அதில் மகிழ்ச்சியும் காண்கிறார்கள்.

குறிப்பாக பாளையில் மணிக்கூண்டு வைக்க வேண்டுமென்பதற்காக உயிராய் இருந்த பல மரங்கள் வேரோடு வெட்டி சாய்க்கப்பட்டிருக்கின்றன. தமிழகத்தின் பல கிராமங்களிலும், வட இந்தியாவிலும் ஆராதனைக்கு ஒதுங்குவதற்கு கூட இடமில்லாதிருக்கையில் இங்கோ பல லட்சங்கள் செலவில் இவர்களுக்கு மணிக்கூண்டு என்ன தேவைக்கோ தெரியவில்லை.

இறைவன் பெயரில்
இறைப்பணி நடக்கின்றதோ இல்லையோ
இங்கு-பகட்டான பிற பணிகள்
இலகுவாக நடக்கின்றன